செப்பாங் மே 5-இந்தியாவின் முதல் உலக யுனெஸ்கோ நகரான அமெதாபாத் மற்றும் கோலாலம்பூருக்கு இடையிலான நேரடி விமானச் சேவையை ஏர் ஆசியா தொடங்கியது.
வாரத்திற்கு 4 முறை இந்த விமானச் சேவை முதல் கட்டமாகச் செயல்படும். இன்று 100 விழுக்காடு பயணிகளுடன் AK 90 ஏர் ஆசியா விமானம் கோலாலம்பூர் கேஎல் ஐஏ 2 அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.
அமெதாபாத் நகரின் செழிப்பான் கலாச்சார பாரம்பரியத்தைக் கண்டறிய மலேசியப் பயணிகளுக்கு இந்த விமானச் சேவை ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது.
இன்று காலை அமெதாபாத் நகரிலிருந்து வந்தடைந்த பயணிகளைத் தென் கிழக்கு ஆசியா மலேசியச் சுற்றுலாத்துறை துணை இயக்குநர் சொலேஹூடின் அமாட் மற்றும் ஏர் ஆசியா அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இந்த புதிய விமானச் சேவையின் மூலம் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் ஏர் ஆசியா வலிமையுடன் கால் பதித்துள்ளதாக ஏர் ஆசியா குழும நிறுவன வர்த்தகப் பிரிவின் தலைமை செயல்முறை அதிகாரி பாஃல் கேரல் கூறினார்.
இந்தியா உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவிற்கு ஒரு முக்கிய விற்பனை சந்தை என்றார் அவர்.
இந்தியாவில் 15 நகர்களுக்கு ஏர் ஆசியா நேரடி விமானச் சேவையை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவின் அழகைக் கண்டு களிக்க இந்தியப் பிரஜைகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் சொன்னார்.
மலிவு கட்டணத்தில் லட்சக்கணக்கான இந்தியப் பிரஜைகளை மலேசியாவிற்கு ஏர் ஆசியா கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியப் பிரஜைகளுக்கு இலவச விசா மலேசியா அரசாங்கம் வழங்கியுள்ளதால், அதிகமான இந்தியச் சுற்றுப்பயணிகள் எளிதாக மலேசியாவிற்கு வருகை புரிய வழி வகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
12 total views, 1 views today