வாஷிங்டன்: அமெரிக்காவில் ஆய்வகங்கள் நிரம்பி வழிவதால், மக்களின் சிரமத்தை குறைக்க வீட்டிலேயே சுயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் எளிதான கருவி அறிமுகமாகியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தினமும் லட்சக்கணக்கான பரிசோதனைகள் நடத்தி தொற்று பாதித்தோரை தனிமைப்படுத்தி வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.7 லட்சம் பேரிடம் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரிசோதனை செய்வதில் உள்ள சிரமத்தை குறைக்க சுயபரிசோதனை கருவிகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி தந்துள்ளது. அவசரகால பயன்பாட்டுக்கு மட்டுமே இதனை பயன்படுத்தலாம். மருந்துவரின் பரிந்துரை இதற்கு தற்போது அவசியமாகும்.
லூசிரா சுகாதார நிறுவனம் இந்த விரைவு பரிசோதனை கருவியை உருவாக்கியுள்ளது. வீடு, மருத்துவரின் அறை, அவசர சிகிச்சை அறை போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். வீடுகளில் பயன்படுத்தும் போது சுயமாக மூக்கு மற்றும் தொண்டை சளி மாதிரியை குப்பியில் சேகரிக்க வேண்டும். பின்னர் அதை கருவியிலிடும் போது ஒளிரும் டிஸ்பிளே கொண்டு முடிவுகளை எளிதில் அறியலாம். இந்த முடிவுகளை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.
பரிசோதனை மையங்கள் நிரம்பி வழிவதால் இந்த முறை பரிசோதனைக்கு எப்.டி.ஏ., அனுமதி தந்துள்ளது. இதன் மூலம் நோய் பரவுவது குறையும் என எஃப்.டி.ஏ., ஸ்டீபன் ஹான் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் குறைபாடுகளும் நிறைய உள்ளன. அவசர காலத்திற்கு பயன்படுத்த மட்டுமே ஏற்றது என்கின்றனர். மனித பிழை மற்றும் தவறான முடிவுகளை காட்டலாம், தொற்று உறுதியானாலும் அரசின் கவனத்துக்கு வராமல் போகலாம் என்கின்றனர்.
159 total views, 1 views today