கோலாலம்பூர் ஜூன் 11
தொற்றா நோய்களின் சுமைகளை சமாளிக்கும் வகையில் வாழ்வியல் மருந்து குறித்து டோஹா பிரகடனத்தில் மலேசியா கையெழுத்திட்டது.
கடந்த பிப்ரவரியில் கட்டார்,டோஹாவில் நடந்த வாழ்வியல் மருந்து உச்ச நிலை மாநாட்டை தொடர்ந்து, 2024 பிப்ரவரி 18 முதல் 24 ஆம் தேதி வரை நடந்த வாழ்வியல் மருந்து வாரத்தின் போது இந்த பிரகடனம் அறிவிக்கப்பட்டது.கட்டார் சுகாதார மக்கள் தொகை கழகம், உலகளாவிய வாழ்வியல் மருந்து கூட்டணி மற்றும் அனைத்துலக வாழ்வியல் மருந்து வாரியம் ஏற்பாடு செய்த இந்த உச்ச நிலை மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த 24 மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து மலேசிய வாழ்வியல் மருந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் சிவனேஸ்வரன் பூபாலசிங்கம் கலந்து கொண்டார்.
சுகாதார பாதுகாப்பில் புரட்சியை ஏற்படுத்த வாழ்வியல் மருந்தின் பங்கு குறித்து இந்த உச்ச நிலை மாநாட்டில் டாக்டர் சிவனேஸ்வரன் உரையாற்றினார்.மலேசியாவில் பொது மற்றும் தனியார் சுகாதார பாதுகாப்பு முறையில் வாழ்வியல் மருந்தை ஒருங்கிணைக்கும் அவசியம் குறித்து அவர் பேசினார்.
நெகிரி செம்பிலான், சிரம்பானில் பொது சுகாதார பாதுகாப்பு வசதிகளில் நீரிழிவு சிகிச்சைக்கு வாழ்வியல் மருந்தை வெற்றிகரமாக அமலாக்கம் செய்த உலக சுகாதார கழகம் மற்றும் மலேசிய சுகாதார அமைச்சின் சாதனையை அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த திட்டம் நமது சுகாதார பாதுகாப்பு முறையில் வாழ்வியல் மருந்தை ஒருங்கிணைக்க வழி வகுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.தொடர்பில் இல்லாத நோய்களை சமாளிக்க உலகளாவிய நடவடிக்கை தேவை என்பதை டோஹா பிரகடனம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
உலகளாவிய நிலையில் 10 மரணங்களில் 7 மரணங்கள் இந்த நோய்களுக்கு உட்பட்டதாகும்.
மலேசியாவில் சுகாதார பாதுகாப்பு பட்ஜெட்டில் 16 விழுக்காடு இந்த நோய்களை கட்டுப்படுத்த செலவிடப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வாழ்வியல் மருந்தில் அதிகமான சுகாதார பாதுகாப்பு நிபுணர்களுக்கு பயிற்சியளிக்கும் அவசியம் குறித்து டாக்டர் சிவனேஸ்வரன் வலியுறுத்தினார்.
இதனிடையே 4ஆவது மலேசிய வாழ்வியல் மருந்து மாநாடு எதிர்வரும் நவம்பர் 21-22 ஆகிய தேதிகள் நடைபெறுமென அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 23 ஆம் தேதி அனைத்து உலகை வாழ்வியல் மருந்து வாரியம் நடத்தும் வாழ்வியல் மருந்து சான்றிதழ் தேர்வு நடைபெறும் என அவர் குறிப்பிட்டார்.
119 total views, 1 views today