புத்ரா ஜெயா ஏப் 15-மலேசிய இந்து சங்க பிரதிநிதிகளுடன் இன்று தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் ஆரோன் ஆகோ டாகாங் மற்றும் துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி சந்திப்பு நடத்தினர்.
இந்த சந்திப்பில் தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்மான் முகமட் யூசுப் மற்றும் துணை தலைமைச் செயலாளர் சொப்ரி மாட் டாவூட் ஆகியோரம் கலந்து கொண்டனர்.
அண்மைய காலமாக சமூக வலைத்தளங்களில் இனத்தை இழிவுபடுத்தும் மற்றும் வெறுப்பு ஏற்படுத்தும் வகையிலான அறிக்கைகள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாகத் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
இந்த விவகாரத்தை அமைச்சு கடுமையாகக் கருதுவதோடு, மத புரிந்துணர்வை வலுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்த சந்திப்பில் தேசிய ஒற்றுமை துறை அமைச்சர் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இலக்கை அடையத் தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளை அமைத்து நடத்தி வரும் என அமைச்சர் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக வலைத்தளங்களில் மத தொடர்பான ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரை அழைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி அமைச்சர் எனக்கும் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
புரிந்துணர்வு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்க இது போன்ற கலந்துரையாடல் மிகவும் அவசியம் என அமைச்சர் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் வலிமைக்குப் பல இன மக்களுக்கிடையிலான புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் முக்கியமாக இருந்து வருவதை அமைச்சு வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
இன உணர்வைத் தூண்டும் வகையிலான அறிக்கைகளை வெளியிடும் தரப்பினரை அடையாளம் கண்டு சந்திப்பு நடத்த அமைச்சு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக செனட்டர் சரஸ்வதி குறிப்பிட்டார்.
25 total views, 2 views today