சுங்கை பூலோ, ஜன. 22-
தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்டமைப்புப் பணிகளில், தாம் அதிதீவிரம் காட்டி வருவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
‘ரமணன் தீர்வு’ எனும் சுலோகம் தாங்கிய தமது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, “அதிநவீன விளையாட்டு மற்றும் இளைஞர் மையம்” உருவாக்குதல் ஆகும்.
இம்மையத்தை உருவாக்க, சரியான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக, பெட்டாலிங் மாவட்ட மன்றத் தலைவர் டத்தோ ஹாஜி முகமட் ஜுஸ்னி பின் ஹாஷிமுடினுடன் தாம் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.
திட்டமிட்டப்படி இந்த அதிநவீன மையம் உருவாக்கப்படுவதன் வழி, சுங்கை பூலோவிலுள்ள இளைஞர்களின் தனித்திறமைகள் பட்டைத்தீட்டப்படுவதோடு, அவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்வியல் சூழ்நிலையும் அமையப்பெரும் என்று டத்தோ ரமணன் நம்பிக்கை தெரிவித்தார்.
மற்றொரு நிலவரத்தில், டேசா மோக்கிஸ் பகுதியில் ஏற்படுகின்ற வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குரிய நீண்ட கால திட்டம் வரையப்பட வேண்டும் என்பதையும் மாவட்ட மன்றத் தலைவரிடம் தாம் முறையிட்டதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
மேலும், சுங்கை பூலோ பகுதியில் உச்ச நேரங்களில் நிலவி வரும் சாலை போக்குவரத்து நெரிசல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், சுங்கை போலீஸ் தலைமையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக, கூடுதல் நிலம் தேவைப்படுவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பெட்டாலிங் மாவட்ட மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், சுங்கை பூலோ மக்களின் வாழ்வாதார மேன்மைக்கு வித்திடும் பல ஆக்கப்பூர்வமான விஷயங்கள் பேசப்பட்டதாகவும், இத்தகைய இருவழி ஒத்துழைப்பின் வழி, தமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகள் இலக்கு நோக்கு நகர்வதாகவும் டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.
-முற்றும்-
111 total views, 1 views today