English Tamil Malay

காராக் டிச 30
இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் விவகாரங்களை கவனிக்க துணை பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் அமிடி நியமனம் செய்துள்ள சிறப்பு அதிகாரியான ரமேஷ் ராவ்விற்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் ஜசெக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ் வலியுறுத்தினார்.

ரமேஷ் ராவ்வின் நியமனத்தை சர்ச்சையாக்குவதை நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
அம்னோவின் ஒத்துழைப்பின் காரணமாகத்தான் இன்று பக்காத்தான் ஹராப்பான் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் ஒற்றுமை அரசாங்கத்தை அமைத்துள்ளது.

ஆகையால் துணை பிரதமரும் அம்னோ தலைவருமான ஜாஹிட்டின் இந்த நியமனத்தை ஒரு சர்ச்சையாக நாம் கருத வேண்டிய அவசியம் இல்லை என அவர் சொன்னார்.

கடந்தக் காலங்களில் கட்சி அடிப்படையில் தான் இந்தியர்களுக்கான உதவி வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசாங்கத்தின் நிதி அந்த சமூகத்திற்கு முறையாக சென்று சேரவில்லை.


தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஆட்சியில் இந்திய சமூகத்தின் நலன்களுக்கு மஇகாவின் மூலம் தான் அரசாங்கத்தின் நிதி வழங்கப்பட்டது.


ஆனால் அந்த நிதி இந்திய சமூகத்திற்கு முறையாக சேரவில்லை என்பது தான் நாடறிந்த உண்மை என்றார் அவர்.
ஆனால் நடப்பில் உள்ள ஒற்றுமை அரசாங்கத்தில இந்திய சமூகத்தின் நலன்களை காக்க ரமேஷ் ராவ்வை துணை பிரதமர் கைகாட்டி உள்ளார்.


இந்த நிலையில் நாம் அனைவரும் இந்திய சமூகத்தின் எதிர்கால நலனுக்காக ரமேஷ் ராவிற்கு தோள் கொடுக்க வேண்டும் என காமாட்சி குறிப்பிட்டார்.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி ஒன்றிணைந்துதான் ஒற்றுமை அரசாங்கம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

அதே வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்தியர்களின் நலன்களை அணுக்கமாக கண்காணித்து வருவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 121 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *